கமல்ஹாசனின் பெயர், புகைப்படத்தை வணிக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கமல்ஹாசனின் பெயர், புகைப்படத்தை வணிக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.;
சென்னை,
இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் ஆகியவற்றை தனது அனுமதி இன்றி யாரும் வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறியிருந்தார்.
சென்னையில் உள்ள ‘நீயே விடை’ நிறுவனம், அவரது அனுமதியின்றி அவரது உருவம் மற்றும் திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளை விற்பனை செய்வதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற செயல்கள் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் எதிர்காலத்தில் அடையாளம் தெரியாத யாரேனும் தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தினாலும், அவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் வகையில் பொதுவான ஒரு தடையை கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கமல்ஹாசனின் பெயர், புகைப்படத்தை வணிக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.