ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் "மாநாடு"
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில், மாநாடு திரைப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.