தர்மஸ்தலா விவகாரத்தில் உரிய விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - நடிகை ரம்யா
கர்நாடக மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.;
மங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை 4-ம் தேதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார். அதில், கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களின் உடல்களை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோவில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோவில் முன்னாள் ஊழியரை பெல்தங்காடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றனர்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர். இவ்வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றமே அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கோபாலகவுடா தலைமையில் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ரம்யா, "தர்மஸ்தலாவில் பெண்கள் காணாமல் போனது மற்றும் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக எழுந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். வழிபாட்டுத்தலமான தர்மஸ்தலா, மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இந்த விவகாரத்தில் முறையான, நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், 'வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. எனவே போலீசார் விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் எஸ்ஐடி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்' என்றார்.
தமிழில் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா எனும் திவ்யா ஸ்பந்தனா. அர்ஜுனுடன் கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.