ஆவணி பௌர்ணமி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, புடவை மற்றும் ஜாக்கெட் உள்ளிட்ட 22 பொருட்கள் வழங்கப்பட்டன.;
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஆவணி மாத பௌர்ணமியான இன்று விளக்கு பூஜை நடைபெற்றது. சந்திர கிரகணம் வருவதால், முன்கூட்டியே அதாவது பிற்பகல் 3 மணிக்கு விளக்கு பூஜை நடைபெற்றது.
உற்சவர் அம்மன் மண்டபம் முன்பு நடைபெற்ற இந்த பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு (125 கிராம்), குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி, தாலி கயிறு, குண்டு மஞ்சள், கண்ணாடி வளையல், விளக்குத்திரி, தையல் இலை, வெற்றிலை மற்றும் பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சைபழம், பூச்சரம், உதிரிப்பூக்கள், பச்சரிசி, தீப எண்ணெய், கழுத்தில் அணியும் அடையாள அட்டை, புடவை மற்றும் ஜாக்கெட் என 22 பொருட்கள் வழங்கப்பட்டன. விளக்கு பூஜையைத் தொடர்ந்து, உற்சவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.