திருநாங்கூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
பிரம்மோற்சவ விழாவில், 6-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.;
சீர்காழி அருகே திருநாங்கூரில் செங்கமல வள்ளி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாசுரனை வதம் செய்து பூமியை மீட்டபின், இந்த ஊரில் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாளாக காட்சியளித்ததாக தல புராணம் கூறுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு இணையாக இந்த ரங்கநாதர் கருதப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வார்கள் இப்பெருமாளை பற்றி பாசுரங்கள் பாடி உள்ளனர்.
ஆன்மிக சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் பெருமாள் முன்னிலையில் வேத ராஜன் பட்டாச்சாரியார் கருட கொடியை ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடந்தது. தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வருகிற 6-ம் தேதி திருத்தேர், 8-ம் தேதி மாலை திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.