கைசிக துவாதசி ஆஸ்தானம்.. திருமலையில் உக்ர சீனிவாசமூர்த்தி வீதிஉலா

கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.;

Update:2025-11-02 13:34 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று கைசிக துவாதசி ஆஸ்தான விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவையைத் தொடர்ந்து கோவிலில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவரான உற்சவர் உக்ர சீனிவாசமூர்த்தி தனது உபநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை 4.30 மணி முதல் 5.45 மணி வரை வீதியுலா நிகழ்வு நடைபெற்றது. மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் உக்ர சீனிவாசமூர்த்தியை தரிசனம் செய்தனர்.

அதன்பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலுக்குள் சென்றடைந்ததும், தங்க வாயில் அருகே கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது. கைசிக புராணத்திலிருந்து, பகவானின் தீவிர பக்தனான நம்பாடுவானின் கதையை வேத பண்டிதர்கள் பாராயணம் செய்தனர்.

இந்நிகழ்வில் திருமலை சின்ன ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஏ.கே.சிங்கால், துணை செயல் அலுவலர் லோகநாதம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மற்ற திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளின் போது, மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்