திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 27-ந் தேதி மாலை 4.30 மணி அளவில் நடக்கிறது.;
திருச்செந்தூர்,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா ஒரு வாரம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கின்றது. பின்னர் சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி 6-ம் நாள் சூரசம்ஹாரம் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடக்கிறது. 28-ந் தேதி இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கின்றது.
திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவிழா காலங்களில் 700 போலீசாரும், சூரசம்ஹாரம் நடைபெறும் தினமான 27-ந் தேதி 4,600 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடற்கரை பகுதியில் போலீசார் கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் தற்காலிக மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பு மிதவைகள் போடப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் நேற்று கோவிலில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.