மீனச்சலில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா: கிருஷ்ணரின் லீலைகளை நடித்து காட்டி அசத்திய சிறுவர்கள்

நாதஸ்வரம், தவில் மேளத்திற்கு ஏற்ப நடனமாடி கிருஷ்ண லீலையை நடித்து காட்டியது அனைவரையும் கவர்ந்தது.;

Update:2025-09-14 17:54 IST

கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மீனச்சல்  கிருஷ்ண சுவாமி கோவிலில் கடந்த 10ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கியது. இன்று காலை மஹா கணபதி ஹோமம், கலச பூஜை, கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து சிறப்பு உறியடி என்ற கண்ணன் விளையாட்டு நடைபெற்றது. இதில் கண்ணன், ராதை போன்ற வேடம் அணிந்த சிறுவர்கள், கிருஷ்ணரின் பால்ய கால லீலைகள், குறும்புத்தனம் உள்ளிட்ட கிருஷ்ண அவதார கதைகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். நாதஸ்வரம், தவில் மேளத்திற்கு ஏற்ப நடனமாடி கிருஷ்ண லீலையை நடித்து காட்டியது அனைவரையும் கவர்ந்தது. இந்த உறியடி நிகழ்வினை மீனச்சல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் சிறப்பு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்