திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 77,043 பக்தர்கள் வருகை தந்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், விடுமுறை தினங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
அந்த வகையில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால், திருப்பதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இலவச தரிசனத்தில் சுமார் 4 கி.மீ. வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15-ந்தேதி(நேற்று) திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 77,043 பக்தர்கள் வருகை தந்ததாகவும், 41,859 பேர் முடி காணிக்கை செலுத்தியதாகவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்டியல் காணிக்கை மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.3.53 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.