தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள்; அறிவிப்பு வெளியீடு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,450 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளின் முழு நிர்வகப்பணிகளை கவனித்து வருகின்றனர்.
குறிப்பாக, தலைவர், உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊராட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிப்பதோடு, மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துதல், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அரசு திட்டங்களை மேற்பார்வையிடுவதோடு, வரிவசூல் உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் அரசுப்பணியாளராக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,450 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இப்பணிக்கு www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அந்தந்த மாவட்ட அளவில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தகுதிகள், வயதுவரம்பு ஆகியவற்றுடன் கூடிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (10ம் தேதி) முதல் நவம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
அதன்பிறகு, நவ. 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, டிச.3ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
டிசம்பர் 16ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 17ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கடைப்பணியிடங்கள் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும் இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.