உத்தரபிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் அதிரடி கைது: பரபரப்பு தகவல்
தமிழகத்தை சேர்ந்தவரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.25 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே ஷாஜகான்பூரில் மதமாற்றம் செய்வதற்காக ரூ.4 கோடி வரை வங்கிமூலம் நிதி அளிக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நிதி தமிழ்நாட்டில் உள்ள ஒரு அமைப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கும்பி கிராமத்தில் நடந்த இந்து மதம் அல்லாத மாற்று மத பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த ஹரிஷ்சந்திரா (வயது 50), அவருடைய மகன் சைலேஷ் (25), சைனா ரூபியா கிராமத்தில் ஹேம்ராஜ் மற்றும் ஓம்பல் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த நிதியில் இருந்து ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பத்மநாபனின் வங்கிக் கணக்கிற்கு ரூ.25 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த அந்த அமைப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் திவேதி தெரிவித்தார்.