டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது- பயங்கர சதி திட்டம் முறியடிப்பு
பயங்கரவாத கும்பல் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது;
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், டெல்லியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த ரகசிய தகவல்கள் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்தன. இதையடுத்து, டெல்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் உஷாராக்கப்பட்டனர். அவர்கள் தெற்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
இந்த சோதனையின் போது, மும்பையில் இருந்து டெல்லி வந்த அபுபக்கர் மற்றும் அப்தாப் ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பின்னர், போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஆசார் டேனிஷ் என்பவரை கைது செய்தனர். ராஞ்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது, டெல்லி போலீசார் உள்ளூர் போலீசாருடன் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, வெடிமருந்துகள், ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள், மடிக்கணினி, செல்போன்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஹைதராபாத், மும்பை, மத்திய பிரதேச மாநிலம் போபால் உள்ளிட்ட நகரங்களில் டெல்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிரடி சோதனைகள் நடத்தியது. சந்தேகத்தின் பேரில் எட்டு பேரை பிடித்து விசாரித்தனர். இதில் இருவருக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.கைதான ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இவர்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்பை பரப்பி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு இணையதளக் குழுக்களை நடத்தி வந்தனர். இதன் மூலம் அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தனர்.
இந்திய இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்தும் வந்தது தெரியவந்தது. மேலும், தீவிரவாத இயக்கங்களில் இணையும் இளைஞர்களுக்கு ஐ.இ.டி. வெடிகுண்டு, ஆயுதங்கள் தயாரிப்பு பயிற்சிகளை கைதான ஆசார் டேனிஷ் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பயங்கரவாத கும்பல் கைது செய்யப்பட்டதன் மூலம், இந்தியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கர சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.