கடல்வழி மேம்பாலத்தில் ஆபத்தான சாகசம் செய்த இந்தி பாடகர் மீது வழக்குப்பதிவு
பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் ‘செல்பி’ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கார் ஒன்று நடுவழியில் நின்றது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் திடீரென மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி ஆபத்தான முறையில் நின்று கொண்டு சாகசம் செய்தார். அவருடன் சென்ற 2 பேர் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
சாகசம் செய்த பின்னர் அவர்கள் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த வீடியோவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாலத்தில் உயிருக்கு ஆபத்தான வகையில் தடுப்பு சுவரில் ஏறி நின்று சாகசத்தில் ஈடுபட்டவர் இந்தி சினிமா பின்ணனி பாடகர் யாசர் தேசாய் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார், பாடகர் யாசர் தேசாய் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலத்தில் வாகனங்களை நடுவழியில் நிறுத்தவோ, இறங்கி 'செல்பி' எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாடகர் யாசர் தேசாய் தடுப்பு சுவரில் ஏறி ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.