துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு
புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க போதுமான எம்.பிக்கள் பலத்துடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு உள்ளது.;
புதுடெல்லி,
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நல பிரச்சினைகள் தொடர்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதனால் புதிய துணை ஜனாதிபதியை விரைவில் தேர்ந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஜனாதிபதி பதவி காலியாக இருந்தால் 6 மாதத்துக்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் துணை ஜனாதிபதி பதவி காலியானால் விரைவில் புதியவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
புதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்கப்படும் வரை தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவரான ஹரிவன்ஷ் நாராயண்சிங் மாநிலங்களவை தலைவர் பொறுப்பை கவனிப்பார். இதனையடுத்து நேற்று அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். ஜெகதீப் தன்கரின் திடீர் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க போதுமான எம்.பிக்கள் பலத்துடன் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு உள்ளது. எதிர்க்கட்சிகளை விட சுமார் 70 எம்.பிக்கள் ஆளுங்கட்சிக்கு இருக்கிறது. எனவே புதிய துணை ஜனாதிபதி தேர்வு பாஜக விருப்பத்துக்கு ஏற்பவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற இயலாது என்பதால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி தேர்தலை சந்திக்குமா? என்ற கேள்விக்குறி பலரது மனதிலும் இருந்து வந்தது.
ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்தபோது ஆலோசனை நடத்தினார்கள். தேர்தல் அறிவிக்கை வெளியானதும் மீண்டும் கூடி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளனர்.