ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது: தற்கொலை தாக்குதல் சதி முறியடிப்பு

தீபாவளியையொட்டி நவீன வெடிகுண்டு மூலம், தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.;

Update:2025-10-25 00:21 IST

புதுடெல்லி,

டெல்லியில் ரவுடிகளுடன் நடந்த என்கவுண்ட்டர் மோதலில் போலீசாரால் 4 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கிடையே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போலீசார், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் டெல்லியில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் தீபாவளியையொட்டி நவீன வெடிகுண்டு மூலம், தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார், விசாரணையில் கண்டறிந்தனர். தெற்கு டெல்லியில் பொதுமக்கள் அதிகம் கூடும் சில இடங்களை அவர்கள் குறிவைத்து இருந்ததாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரும் தற்கொலை தாக்குதலிலும் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கூடுதல் காவல் ஆணையர் (சிறப்புப் பிரிவு) பிரமோத் குஷ்வாஹா, “இந்த கைது நடவடிக்கைகளால் டெல்லியில் ஏற்படக்கூடிய பயங்கரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது” என்று கூறினார். தற்போது இருவருடன் தொடர்புடைய பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்