பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம்... மருத்துவமனைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி
16 வயது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர்விட்டு கதறியபடி கூறினாள்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். கடந்த சில நாட்களாக அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டாள். அதையடுத்து அந்த சிறுமியை அவளது தாய் பிரியப்பட்டணா டவுனில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி அவர்கள் சிறுமியின் தாயிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு அவர் இடிந்துபோனார். மேலும் கதறி அழுதார்.
பின்னர் அந்த சிறுமியிடம், அவளது தாயும், டாக்டர்களும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர்விட்டு கதறியபடி கூறினாள். அதைக்கேட்டு டாக்டர்களும், சிறுமியின் தாயும் ஆக்ரோஷம் அடைந்தனர். ஏனெனில் அந்த சிறுமியை அவளது தந்தையே கடந்த ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
அதையடுத்து இதுபற்றி டாக்டர்கள் பெட்டதபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி அவளுடைய தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.