மது குடிப்பதை கண்டித்ததால் விபரீதம்.. பெண்ணுக்கு மொட்டையடித்த கொடூர கணவர்

மது குடிப்பதை கைவிடும்படி கூறி கண்டித்த மனைவியை அவரது கணவரே மொட்டை அடித்த சம்பவம் நடந்துள்ளது.;

Update:2025-09-08 05:24 IST

பாகல்கோட்டை,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் உள்ள கடகோலா கிராமத்தில் வசித்து வருபவர் பசவப்பா. இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 22). பசவப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ஸ்ரீதேவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவியின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து பசவப்பா மீண்டும் மதுகுடித்து விட்டு வந்து ஸ்ரீதேவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினமும் பசவப்பா மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மது குடிக்கும் பழக்கத்தை கைவிடும்படி கூறி பசவப்பாவை, ஸ்ரீதேவி கண்டித்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றவே பசவப்பா கிராம பஞ்சாயத்து தலைவர் சதாசிவ நியாமகவுடாவுடன் சேர்ந்து ஸ்ரீதேவியை சரமாரியாக தாக்கினார். இதில் ஸ்ரீதேவி நிலைகுலைந்து மயங்கினார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்ரீதேவிக்கு வலுக்கட்டாயமாக தலை முடியை வெட்டி மொட்டையடித்தனர். அதையடுத்து மீண்டும் ஸ்ரீதேவியை தாக்கினர்.

இதில் காயமடைந்த ஸ்ரீதேவி பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்