கர்நாடகா: ஐகோர்ட்டு அமர்வு உள்பட பல்வேறு கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவின் மைசூரு, கதாக் மற்றும் பாகல்கோட் மாவட்ட கோர்ட்டுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன.;
மைசூரு,
கர்நாடகாவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டின் தார்வாத் அமர்வுக்கு இன்று இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட சூப்பிரெண்டு குஞ்சன் ஆர்யா, வெடிகுண்டு செயலிழப்பு குழு, தீயணைப்பு படையினர் உள்பட போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கட்டிடங்கள், தரை பகுதிகள், திறந்த வெளி திடல்களில் சோதனைகள் நடந்தன.
இதேபோன்று மைசூரு, கதாக் மற்றும் பாகல்கோட் மாவட்ட கோர்ட்டுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டன. அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட கூடியிருந்த பலரையும் பாதுகாப்பாக வெளியேற்றி விட்டு சோதனை தொடர்ந்தது. எனினும், இந்த தீவிர சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது. இதனால் கோர்ட்டு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது. இதனை செய்த நபர்கள் யார் என கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.