மகன்களின் கண் முன்னே.. தி.மு.க. பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. பேஸ்புக் நேரலையில் தகவல் தெரிவித்த கணவர்
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், நகைகளையும் மனைவி வீணடித்து விட்டதாக அவர் கூறினார்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள கலயநாடு பகுதியை சேர்ந்தவர் ஐசக் மேத்யூ (வயது44), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஷாலினி (39). இவர் ஒரு பள்ளியில் ஆயாவாக வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு 16, 11 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாலினி 2 மகன்களுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இதையடுத்து நேற்று காலை 6 மணியளவில் ஐசக் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அத்துடன் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர் வீட்டுக்குள் நுழைந்து மகன்களின் கண் முன்னே மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவரது மகன்கள் அலறினர்.
ஆனால் ஐசக் மகன்களை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து அவர் முகநூலில் நேரலையில் பேசினார். அப்போது அவர் ‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், நகைகளையும் மனைவி ஷாலினி வீணடித்து விட்டார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தால், மனைவி தாய் வீட்டில் தங்கியிருந்து தனது மனம் போல் வாழ்ந்து வருகிறார். இவ்வாறு அவர் வாழ தேவை இல்லை. ஆதலால் அவரை கொலை செய்து விட்டேன்’ என்று கூறினார்.
பின்னர் ஐசக் காலை 9 மணியளவில் நேராக போலீஸ் நிலையத்தில் சரணடைந்து மனைவியை வெட்டி கொலை செய்ததை எடுத்து கூறினார். உடனே போலீசார் ஷாலியின் பெற்றோர் வீட்டுக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐசக்கை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட ஷாலினி தி.மு.க. கொல்லம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.