எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின.;
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. அவை கூடியதும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதேபோல், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 35 நோட்டீஸ்களை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த நோட்டீஸ்களை மாநிலங்களவை துணைத்தலைவர் நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவையும், மாநிலங்களவையும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.