தேர்வு கட்டணம் செலுத்த பணம் தராததால் ஆத்திரம்... தந்தையை அடித்துக் கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்
அஜய் தேர்வு கட்டணம் செலுத்த பணம் கேட்டு தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.;
கோப்புப்படம்
மும்பை,
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் தேர்வு கட்டணம் செலுத்த பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹின்பால்னர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பஞ்சல் (24 வயது). 12-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் காவலர் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
அஜய்யின் தந்தை காய்கறிகள் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் காவலர் போட்டித் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்காக அஜய் தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழையால் வீட்டில் உள்ள விறகு நனைந்துள்ளது. இதையடுத்து சமையல் செய்வதற்காக அஜய்யின் தாய் தேவிதாஸ் கேஸ் சிலிண்டர் வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த அஜய், "கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு பணம் உள்ளது. ஆனால் தேர்வு கட்டணம் செலுத்த பணம் இல்லையா?" என்று கேட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அவரை சமாதானம் செய்த தேவிதாஸ் காலையில் பணத்தை ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் அஜய் தேர்வு கட்டணம் செலுத்த பணம் கேட்டு மீண்டும் தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அஜய் மரக்கட்டையால் தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயுரிழந்தார்.
இதுகுறித்து தேவிதாஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார், அஜய் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.