புஸ்சி ஆனந்த் முன் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மதுரை ஐகோர்ட் கிளை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது;

Update:2025-10-07 07:29 IST

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்