டாஸ்மாக் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.;
புதுடெல்லி,
தமிழகத்தில் டாஸ்மாக் மது பானக் கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது, பார் உரிமம் வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் ₹1,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. "அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறது?" எனக் கேட்ட தலைமை நீதிபதி, "மாநில விசாரணை அதிகாரத்தின் உரிமையை பறிக்க முயலுகிறதா?" என்றார்.
"சந்தேகம் இருந்தாலே அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வது எவ்வாறு சரியாகும்? ஒரு அதிகாரி தவறு செய்திருந்தால், அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் அளிக்கிறது" என்றும் நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.