துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? - இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது;
புதுடெல்லி,
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையில் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என இந்தியா கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் கூறியிருந்தன. இந்த நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது குறித்து இந்தியா கூட்டணி சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, திமுக எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சுப்ரியா சுலோ, சமாஜ்வாதி ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் யாரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது? என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.