படுக்கை அறையில் ரகசிய கேமரா: கணவர் செய்த காரியம்- அதிர்ந்து போன பெண் அதிகாரி
தனது கணவர் படுக்கை அறை காட்சிகளை ரகசிய கேமரா வைத்து படம் பிடித்து மிரட்டுவதாக அரசு பெண் அதிகாரி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.;
மும்பை,
புனேயில் 31 வயது அரசு பெண் அதிகாரி வசித்து வருகிறார். குரூப்-2 அதிகாரியான இவரது கணவரும் அரசு அதிகாரியாக உள்ளார். இந்தநிலையில் பெண் அதிகாரி கணவர் மீது அம்பேகாவ் போலீசில் பரபரப்பு புகாரை அளித்தார். அந்தப்புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். எனது கணவர் கார் மாத தவணை கட்ட பெற்றோரிடம் இருந்து ரூ.1½ லட்சம் வாங்கி வருமாறு அழுத்தம் தந்தார். நான் வாங்கி வர மறுத்தபோது கணவர் என்னை தாக்கினார்.
கொடுமையின் உச்சமாக எனது கணவர் வீட்டின் படுக்கை அறை, குளியலறையில் ரகசிய கேமரா வைத்து எனது தனிமையை படம் பிடித்து வைத்துள்ளார். அவர் சொல்வதை கேட்கவில்லை எனில் அந்த வீடியோக்களை பரப்பி விடுவேன் என மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்தப்புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்தப்புகார் குறித்து போலீசார் பெண் அதிகாரியின் கணவர், மாமியார், மைத்துனிகள், அவர்களது கணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.