எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடக்கம்
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.;
பெங்களூரு,
ஸ்ரீஹரிகோட்டாவில் 'LVM3-M6' ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிகட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ’புளுபேர்ட்-6′ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6யை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ராக்கெட்டிற்கான இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.