ஈரோட்டில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்
பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;
ஈரோடு,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மனைவி கீர்த்தனா. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்களது உறவினர்களுடன் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு தங்களது பணியை முடித்துக்கொண்டு தற்காலிக கூரையில் குழந்தையுடன் இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடமிருந்து குழந்தையை நைசாக தூக்கிச்சென்றனர். நள்ளிரவு 3 மணிக்கு விழித்த தம்பதியினர், குழந்தை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில், 3 பேர் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். மர்ம கும்பலிடம் இருந்து குழந்தையை மீட்கும் பணியை போலீசார் தற்போது துரிதப்படுத்தியுள்ளனர். பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.