போலீஸ்காரர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2025-10-13 03:30 IST

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் பிரசாந்த் (வயது 32). பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அருணா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் பெரம்பலூர் முத்துலட்சுமி நகரில் பிரசாந்த் புதிதாக வீடு கட்டி கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் குடி புகுந்தார். தற்போது விடுமுறையில் உள்ள பிரசாந்த் தனது மனைவி, குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு களரம்பட்டிக்கு சென்று விட்டார்.

இதையடுத்து நேற்று மாலை பிரசாந்த் குடும்பத்தினருடன் புதிய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ஒரு வைர நெக்லஸ், தோடு, ரூ.20 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்