3 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: 6 பேர் கைது
சென்னையில் 3 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
திரு.வி.க. நகர்,
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.
அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த மாணவியின் தோழிகளான அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு எண்ணூரில் லேப் டெக்னீசியனாக வேலை செய்யும் 14 வயது சிறுமி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஆகியோரும் மாயமாகி இருப்பது தெரிய வந்தது..
மேலும் விசாரணையில் மாணவிகள் 3 பேரையும் காதல் வலையில் வீழ்த்தி பெரம்பூர் அடுத்த அகரம், செங்கல்வராயனம் தெருவை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் அபிஷேக் (வயது 19), கலிமுல்லா(21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்ததும், இவர்களுக்கு பெரவள்ளூரைச் சேர்ந்த சையத் முகமது ஜாபர்(22) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய 3 பேரும் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
காதலில் வீழ்த்தப்பட்ட மாணவிகள் 3 பேரையும், காதலர்களான 3 பேரும் பெரம்பூர் வீனஸ் அருகே உள்ள அரசு நூலகத்தின் மாடிக்கு அழைத்து சென்று இரவில் தனிமையில் தங்கி உள்ளனர். அங்கு மாணவிகளை 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு உடந்தையாக அவர்களது நண்பர்கள் 3 பேரும், ஆட்கள் வருவதை நோட்டம் பார்்த்து இருப்பதும் தெரியவந்துள்ளது. கைதான அபிஷேக், கலிமுல்லா மற்றும் முகமது ஜாபர் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் 3 பேரும் முத்தியால்பேட்டையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.