ஆவடி அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
பாட்டி தூங்கிய நேரத்தில், குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்துள்ளது.;
ஆவடி அடுத்த ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா (26 வயது). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி காந்தாமேரி (25 வயது). இவர்களுக்கு லோகேஸ்வரி (3 வயது) என்ற மகளும் 8 மாத பெண் குழந்தையும் இருந்தது. இவர்களுடன் காந்தாமேரியின் தாயார் சொர்ணா (50 வயது) வசித்து வருகிறார்.
நேற்று மாலை தனது மகள் லோகேஸ்வரியைப் பால்வாடியில் இருந்து அழைத்து வருவதற்காக காந்தாமேரி சென்றுவிட்டார். வீட்டில் 8 மாத பெண் குழந்தையும், சொர்ணாவும் இருந்தனர். காந்தாமேரி, மூத்த மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் ஹாலில் உள்ள தண்ணீர் வாளிக்குள் 8 மாத பெண் குழந்தை தலைகுப்புற விழுந்து கிடப்பதைக் கண்ட காந்தாமேரி அதிர்ச்சி அடைந்தார். குழந்தையைப் பார்த்துக்கொண்டு இருந்த சொர்ணா, வீட்டில் தூங்கிய நேரத்தில், குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.