நெல்லையில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு - சக மாணவன் வெறிச்செயல்
மாணவனை வெட்டிய சக மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் மாணவன் படுகாயம் அடைந்தார். தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சக மாணவனை வெட்டிய 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இருந்து அரிவாளை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்., இன்று பேனா, பென்சில் தொடர்பான தகராறில் 8-ம் வகுப்பு மாணவன்தான் கொண்டு வந்த அரிவாளால் சக மாணவனை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.