தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.;
கோப்புப்படம்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் ஆயில்சேரி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் - பிரெய்சி தம்பதியினர். இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிரெய்சி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தை திடீரென மயக்கமடைந்து பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள ஆவடி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.