ஆவடியில் மர்ம காய்ச்சலால் பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு
கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மாணவியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.;
கோப்புப்படம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 வயது). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த மதுமிதாவை அவரது பெற்றோர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமானதால் ஆவடியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி போலீசார் மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.