10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் இன்று பேசுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொதுஇடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க மக்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசுகிறார் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறினார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ககன்தீப்சிங் பேடி, “கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார். 11-ந் தேதி (இன்று) நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்ற உள்ளார். இது கிராமப்புறங்களிலும் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் கிடைத்துள்ளன என்பதற்கு சான்றாகும். 11 ஆயிரத்து 100 ஊராட்சிகளில் பைபர் ஆப்டிக் இணைப்புகள் இருந்தாலும் 10 ஆயிரம் ஊராட்சிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டங்களில், உடனடியாக செய்யப்பட வேண்டிய 3 அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கூறியிருக்கிறோம். நம்ம ஊரு நம்ம அரசு என்ற திட்டத்தின்படி ஊராட்சியில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இழிவுபடுத்தும் பொருள் தரும் சில சாதிப் பெயர்களை குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பொதுப்பகுதிகளுக்கு வைத்திருந்தால் அந்த பெயரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்று பொதுப் பெயர்களையும் அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் இந்த நோக்கத்தை தனிச்சையாக செய்யாமல், மக்களையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்பதே அரசின் விருப்பம். எனவே அதையும் இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் முடிவு செய்யலாம். எந்தப் பெயரையும் மாற்றம் செய்ய வேண்டாம் என்று மக்கள் விரும்பினால் அதை மாற்றத் தேவையில்லை.
பெயர் மாற்றம் செய்யப்பட்டால் அரசு முடிவு செய்து அரசிதழ் பிறப்பிக்கப்படும். இதே நடைமுறை, இந்த மாத இறுதியில் நகர்ப்புறங்களில் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 838 வார்டுகளில் நடைபெறும் வார்டுசபை கூட்டங்களிலும் பின்பற்றப்படும். கிராமங்களில் ஏழ்மையாக உள்ள குடும்பங்களுக்கு ஏழ்மை ஒழிப்பு கடனுதவியை வழங்கும் திட்டம் உள்ளது. இதற்காக கிராம வறுமை ஒழிப்பு பெண்கள் குழு வீடு வீடாகச் சென்று, யார் யார் மிக ஏழ்மையான குடும்பம் என்பதை கண்டறிய உத்தரவிட்டிருந்தோம். அதற்கான பட்டியல் உள்ளது.
இதையும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் வெளிப்படையாக முடிவெடுத்து, அவர்களில் முன்னுரிமை யாருக்கு தர வேண்டும் என்பதை பட்டியலிடுவார்கள். யார், யாருக்கு என்ன கடன் தர வேண்டும்? என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இதுதவிர மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய அரசின் கோரிக்கைப்படி, சபாசார் இணையதளத்தில் 7,515 கிராம ஊராட்சிகளின் கிராமசபா கூட்டங்களின் வீடியோ பதிவேற்றம் செய்யப்படும்.
சாதிப் பெயரை நீக்க வேண்டுமென்றால் எல்லா சாதிப் பெயரையும் அரசு நீக்குவதுதானே சமூகநீதியாக இருக்கும் என்று நீங்கள் கேட்டால், இழிவுபடுத்தும் அர்த்தம் தரும் சாதிப் பெயர்கள் நீக்கம் குறித்த அரசாணை பற்றி மட்டும்தான் நான் விளக்கம் அளிக்க முடியும்” என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற உள்ள நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்-அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாட உள்ளனர்.