நாமக்கல்லில் குளிரூட்டபட்ட முட்டை சேமிப்பு கிடங்கு; சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
முட்டை உற்பத்தியை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு என்ன செய்தது? என கேள்வி எழுப்பினார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?
கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொழில்வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியை மீட்டெடுக்கவும், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உங்கள் அரசு என்ன செய்தது? முட்டை உற்பத்தி உச்சத்தை அடைந்த போதிலும் கடும் வெப்பநிலை காரணமாக முட்டைகள் சேதமடைந்து, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதே இதுதான் திமுக அரசின் நிர்வாக லட்சணமா?
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டி வீணாகின்றன, கொங்கு மாவட்டங்களில் முட்டைகள் அழுகிப்போகின்றன. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு முதலீடுகளை ஈர்க்க நீங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில் யாருக்கு என்ன பயன்?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.