டித்வா புயல்: பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் - முதல்-அமைச்சர் வேண்டுகோள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.;

Update:2025-11-28 15:22 IST

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டித்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட கலெக்டர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். 16 மாநில பேரிடர் மீட்பு படைகளும் 12 தேசிய பேரிடர் மீட்பு படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்திட வேண்டும்! பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்