விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

கயத்தாறு பகுதியில் விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2025-12-11 21:39 IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா சவலாப்பேரி பஞ்சாயத்தை சேர்ந்த நாகம்பட்டி கிராமம் விவசாயிகள் நிரம்பிய பகுதியாகும். இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் மக்காச்சோள விவசாயம் நடந்து வந்தது.

இந்த பகுதியில் மான், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படு்த்தி வருவதால், ஏராளமான விவசாயிகள் வேறு பணிக்கு சென்று விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மக்காச்சோள விவசாய பரப்பு குறைந்து வந்த நிலையில், நடப்பு ஆண்டில் சுமார் 680 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் ஓரளவு பருவமழை பெய்ததால் பயிர்கள் பூத்து மக்காச்சோள கதிராக பால் பிடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக மான்களும், காட்டுப்பன்றிகளும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள கதிர்களை தின்றும், பயிர்களை சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளன. வயல்களில் விடிய விடிய காவல் காத்தும், பட்டாசுகளை வெடிக்கச்செய்தும் மான்கள், காட்டுப்பன்றிகளை துரத்தி அடிக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்; "இந்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக விவசாயிகள் தினமும் இரவு நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வெவ்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், மேளத்தை அடித்தும் மின்சார சிவப்பு விளக்குகளை ஒளிரவிட்டும் நிலங்களில் காவல் காத்து வருகிறோம். ஆனாலும் சிறிது கண்அயரும் நேரத்தில் மான், காட்டுப்பன்றிகள் கும்பலாக நிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள கதிர்களை தின்பதுடன், பயிர்களையும் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.

நேற்று வரை 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். நாளுக்குநாள் மான், காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் மாற்று பணிக்கு சென்று விட்டனர். இதேநிலை நீடித்தால் பெரும்பாலானோர் விவசாயத்தை கைவிடவேண்டிய சூழல் உருவாகும்.

ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து படைப்புழு தாக்குதல், இதர நோய்களில் இருந்து காப்பாற்றினோம். தற்போது பருவமழை பெய்தநிலையில் கதிர்வரும் நிலையில் மான்களும், காட்டுபன்றிகளும் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்