தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை
திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக கருணாநிதி சிலை வைத்தது மட்டும்தான் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.