ஈரோடு: காட்டு யானை தாக்கி முதியவர் பலி
காட்டு யானை தாக்கியதில் முதியவர் இறந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் குத்தியாலத்தூரை அடுத்த இருட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 79). இவருடைய மனைவி பெருமாளம்மாள். ராஜு மாடுகள் வளர்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். பின்னர் மாலையில் மாடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன. ஆனால் ராஜு வரவில்லை. இதனால் பதறிப்போன அவருடைய மனைவி பெருமாளம்மாள், மகன் ஈஸ்வரன் மற்றும் உறவினர்கள் அவரை தேடிச்சென்றனர்.
கிராமத்தையொட்டி உள்ள அணைக்கரை பகுதியில் காயங்களுடன் ராஜு இறந்து கிடந்தார். மேலும் அவர் காட்டு யானை தாக்கி இறந்திருப்பதும் தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து கடம்பூர் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது யானை தாக்கியதில் ராஜு இறந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து ராஜுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்றபோது யானை தாக்கி முதியவர் இறந்த சம்பவம் கிராமத்தில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.