குடும்ப தகராறில் ஆத்திரம்: மாமியாரை கிணற்றுக்குள் வீசிய மருமகன்

குடும்ப தகராறில் மாமியாரை, மருமகன் கிணற்றுக்குள் தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-10-04 21:41 IST

விருதுநகர் மாவட்டம் துய்யனூர் கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து (29 வயது). இவருடைய மனைவி சத்யா (24 வயது). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சத்யா தனது தாய் இருளாயி என்பவருடன் (70 வயது) வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு குழந்தையை இருளாயி பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை மாரிமுத்து, மாமியார் இருளாயி வீட்டுக்கு சென்று, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறுகூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இருளாயி குழந்தையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, வீட்டின் அருகில் இருந்த கிணற்றுக்குள் இருளாயியை தூக்கி வீசியுள்ளார். பின்னர் அங்கிருந்து மாரிமுத்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

கிணற்றில் தண்ணீர் இருந்ததால் மூதாட்டி காயம் இன்றி தப்பினார். அதேநேரத்தில் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்த இருளாயி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருச்சுழி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டனர்.

பின்னர் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்