கடலில் மூழ்கி தந்தை பலி: மாயமான 2 மகள்களை தேடும் பணி தீவிரம்
கடல் நீரில் மூழ்கி மாயமான இரண்டு பெண்களை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.;
செங்கல்பட்டு,
சென்னை அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37), மரவேலை தச்சராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று விடுமுறை என்பதால் தனது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16), உடன் தனது உறவினர்கள், நண்பர்கள் என 17 பேருடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
பிறகு பொழுதுபோக்கிற்காக மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு வெங்கடேசன் அவரது மகள்கள் உள்ளிட்ட 8 பேர் ஆபத்தை உணராமல் சேறு கலந்த, பள்ளத்தாக்கு உள்ள கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ராட்சத அலையால் வெங்கடேசன், அவரது மகள்கள் கார்த்திகா, துளசி மற்றும் அக்காள் ஹேமாவதி ஆகிய 4 பேரும் ஒரே நேரத்தில் நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டனர்.
அங்கிருந்த மீனவர்கள் 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் ஹேமாவதியை மட்டும் ஒரு மீனவர் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் வெங்கடேசன் உடல் மட்டும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கார்த்திகா, துளசி ஆகியோர் மாயமாகினர். கடலில் மாயமான கார்த்திகா அகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பும், துளசி 11-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் இறந்த வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடலில் மாயமான அக்காள்-தங்கை இருவரையும் மீனவர்கள் உதவியுடன் கடலில் படகில் சென்று அவர்களை தேடி வருகின்றனர். மேலும் மீனவர்கள் காப்பாற்றிய ஹேமாவதியும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்போரூர் முருகன் கோவில் வழிபாட்டிற்கு வந்து, கடலில் குளித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரில் தந்தை பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இரு மகள்கள் கடலில் மூழ்கி மாயமான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.