மாந்திரீகம் செய்வதற்கு பேஸ் புக்கில் உதவி..நெல்லை இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு தகவல்கள்

கயல்விழி கணவரை பிரிந்து வந்தநிலையில் தனிமை அவரை வாட்டியது.;

Update:2025-06-17 16:06 IST

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசிலங்கதுரை. இவரது மகள் கயல்விழி வயது 28. இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இது குறித்து புகாரின்பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவர் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை சேரன்மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து கால்வாயில் இருந்து கயல்விழியின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதுகலை பட்டதாரியான கயல்விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது.பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். கயல்விழி கணவரை பிரிந்து வந்தநிலையில் தனிமை அவரை வாட்டியது. இதனால் கணவரை பிரிந்த ஏக்கத்தில் அவர் வாடிவந்துள்ளார். மீண்டும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கயல்விழி பல கோவில்களுக்கு சென்று வேண்டி வந்தார்.

இந்தநிலையில் அவர் தனது பேஸ்புக்கில் தனது கணவரை சேர்த்து வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கீறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதனை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து முதலில் கயல்விழியை காதல் கண்ணோட்டத்தில் மாயாண்டி ராஜா நெருங்கி உள்ளார். தனது ஆசைவலையில் வீழ்வார் என்று நினைத்து இருந்த மாயாண்டி ராஜாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கயல்விழி மாயாண்டி ராஜாவின் ஆசைக்கு உடன்படவில்லை. இதனால் அவரிடம் மாந்திரீகம் செய்யும் தனது மாமா சிவசாமியிடம் அழைத்துச்சென்று பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி கயல்விழியை மீண்டும் கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி நம்பவைத்து பல்வேறு தவணைகளாக அவரிடம் இருந்து மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் சிவசாமி, மாயாண்டி ராஜா ஆகியோர் பறித்துள்ளனர்.ஒருகட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை அறிந்த கயல்விழி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் சம்பவதன்று கயல்விழியை சுசிந்திரத்துக்கு வரவழைத்து சிவசாமியும், அவருடைய சகோதரி மகனான மாயாண்டி ராஜா, வீரவநல்லூரை சேர்ந்த கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் கயல்விழி அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு கயல்விழி உடலை காரில் எடுத்து சென்று சேரன்மகாதேவியை அடுத்த கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் தொடர்ந்து சிவனேஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரையும் பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்