கரூர் துயரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update:2025-09-28 02:22 IST

த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர், 2-ம் கட்டமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்ட பிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார்.

இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து நாமக்கல் சென்றார். அங்கு காலை 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் மதியம் 2.30 மணிக்கு பிரசார இடத்தை சென்று அடைந்தார்.

அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகளும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் விஜய் பிரசாரம் செய்ய வந்த இடத்தின் அருகிலேயே காத்திருந்தனர்.

ஆனால் விஜய்யின் பிரசார வாகனம் நேற்று மாலை சுமார் 5.40 மணியளவிலேயே கரூரை அடைந்தது. பின்னர் வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் ஊர்ந்தவாறு பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், அந்த வாகனம் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 1½ மணி நேரம் ஆனது. இதையடுத்து அவர் இரவு 7 மணியளவிலேயே கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்தை வந்தடைந்தார்.

அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானவர்கள் வந்ததாலும், ஏற்கனவே பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் விஜய் அந்த பிரசார கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அந்த பகுதியின் அருகே உள்ள கடையின் முன்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட், தென்னங்கீற்றுகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்தனர்.

அதேநேரத்தில் கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து மயக்கம் ஏற்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனித்தனியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 35 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக கரூர் செல்கிறார். அங்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசுகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்