100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் உயிரிழப்பு
வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.;
திருவனந்தபுரம்,
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு, பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஜே.சி.பி. வாகனத்துடன் லாரி சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம், இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.