தந்தையை கொன்று உடலை ஆற்றில் வீசிய நபர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மேட்டூர் அருகே கோட்டையூர் பரிசல் துறையில் முதியவர் பிணத்தை போலீசார் மீட்டனர்.;

Update:2025-10-27 03:15 IST

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர் பரிசல் துறை காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 70 வயதுடைய முதியவர் உடல் மிதந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், இறந்தவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் அமைந்துள்ள கோபிநத்தம் கிராமத்தை சேர்ந்த சங்கரன்(வயது 70) என்பது தெரிய வந்தது.

மேலும் இவருக்கும், அவரது மகன் கோவிந்தராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் தனது தந்தையை அடித்துக்கொலை செய்து காவிரி ஆற்றில் வீசி உள்ளார். பின்னர் சங்கரன் உடல் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கோட்டையூர் பரிசல் துறையில் கரை ஒதுங்கியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொளத்தூர் போலீசார் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாதேஸ்வரன் மலை போலீசார் கோட்டையூர் பகுதிக்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாதேஸ்வரன் மலை போலீசார் வழக்குப்பதிந்து சங்கரனை அடித்துக்கொன்றதாக அவரது மகன் கோவிந்தராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்