மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை எட்டியது; விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 44-வது முறையாகும்.;
சேலம்,
கேரளாவில் 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்பே பெய்ய தொடங்கியது. இதேபோன்று கர்நாடகாவிலும் தொடர் பருவமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.
இதனை அடுத்து பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 60 ஆயிரத்து 740 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்டது. இந்த நீர்வரத்தானது நேற்று மாலையில் வினாடிக்கு 80 ஆயிரத்து 984 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
120 அடி உயர மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று பகலில் 117 அடிக்கு மேல் உயர்ந்தது. நேற்று இரவு 118 அடியை எட்டியது. அதே நேரத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த தண்ணீரானது, அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) இருந்தது. இதனால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதன்படி சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்கள் மூலம் அந்தந்த மாவட்டம் முழுவதும் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காவிரி கரையோரம் வசித்து வரும் தாழ்வான பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.22 அடியை எட்டியது. அணையின் மொத்த கொள்ளளவான 93.4 டி.எம்.சி.யில் தற்போது நீர் இருப்பு 92.23 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், மேட்டூர் அணை 120 அடி என்ற முழு கொள்ளளவை இன்று எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா துணை அமைச்சர் ராஜேந்திரன் நீர் வெளியேற்றத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு 12 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து ஜூன் 12-ல் காவிரி படுகை பாசனத்திற்காக நீர் வெளியேற்றப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 68 ஆண்டுகள் கழித்து ஜூன் மாதத்தில் 2-வது முறையாக முழு கொள்ளளவை அணை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 44-வது முறையாகும்.
இதனையடுத்து, அணை நீர் பாய்ந்து செல்லும் பகுதிகளை ஒட்டிய கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம், பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.