புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்;

Update:2025-10-30 09:05 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,

வாக்காளர் சிறப்பு திருத்த முறை பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு இயக்கங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுகிற நிலையில், அவர்களை பொறுத்தவரை நேர்மையானவர்கள். ஆனால் அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்போது, அதனை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை வருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்காக உயர்ந்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து பலர் வேலை பார்க்கின்றனர். பின்னர் தங்களது பண்டிகை மற்றும் சொந்த நிகழ்ச்சிக்கு திரும்ப சென்று விடுகின்றனர். அவர்கள் இங்கு இருக்கக்கூடிய வாக்காளர்களாக பதியக்கூடும்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தெரியாது. அவர்களது மாநில அரசியல் சூழலை வைத்து தான் செயல்படுவார்கள்.

தமிழகத்தில் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாதவர்களை வாக்காளர்களாக சேர்க்கக்கூடாது என்பது தான் எங்கள் கருத்து. அவர்கள் வேலைக்காக அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள் தற்காலிகமாக வந்து செல்பவர்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு நிரந்தரமாக இருக்கக்கூடியவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்