தூத்துக்குடியில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்ட நீதிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மொத்தம் 15 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆர்.வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (13.9.2025, சனிக்கிழமை) எனது (மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.வசந்தி) தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 15 அமர்வுகள் நடக்கிறது.
இதில் சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. மேற்சொன்ன தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.