நெல்லையில் ஆணவப் படுகொலை: கவினின் உடலை வாங்க 4வது நாளாக உறவினர்கள் மறுப்பு

கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2025-07-31 13:10 IST

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகர்பகுதியில் வசித்து வருகிறார்கள்.நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதில் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, கவினும், சுர்ஜித்தின் அக்காளும் ஒரே பள்ளியில் படித்து வந்தபோது பழகியுள்ளனர்.சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். தற்போதும் கவின், அந்த பெண்ணிடம் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சுர்ஜித் கடந்த 27-ந் தேதி பாளையங்கோட்டைக்கு வந்த கவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுர்ஜித்தை கைது செய்தனர். மேலும் கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் கவினின் செல்போனும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கவின் கொலையாவதற்கு முன்பாக யார், யாரிடம் பேசினார். அதில் காணப்படும் படங்கள் ஆகியவற்றை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே கவின் உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 4வது நாளாக உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கவினை படுகொலை செய்த சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் தாயை கைது செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தனது சகோதரியை காதலித்ததால் பட்டியலின இளைஞர் கவினை சுர்ஜித் படுகொலை செய்தார். சுர்ஜித் சரணடைந்த நிலையில் உதவி ஆய்வாளர்களான அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டும் என கவினின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த அம்மாவையும் கைது பண்ணனும்; அதன் பிறகுதான் என் மகனின் உடலை வாங்குவேன் என்று,நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட ஐ.டி. மென்பொறியாளர் கவினின் தந்தை கூறியுள்ளார்.

இதனிடையே கவின் கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்தநிலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் செல்போன் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்