நெல்லை: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

விக்கிரமசிங்கபுரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-06-20 17:47 IST

கோப்புப்படம் 

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் சுப பிரதீப் (29 வயது). இவர் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியார் ஆலையில் ஒப்பந்ததாரராக வேலை செய்தார். அப்போது அங்கு பணியாற்றிய ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தை சேர்ந்த மாரி மகள் அருணாவை (24 வயது) காதலித்தார்.

வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது சிவந்திபுரம் மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு செல்வ பிரகதீஷ் (3 வயது) என்ற மகன் உள்ளார்.

அருணாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கணவருடன் வீடு திரும்பினார். பின்னர் அனைவரும் வீட்டில் தூங்கினர். அப்போது நள்ளிரவில் அருணா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண்விழித்த சுப பிரதீப் மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து சென்று, இறந்த அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 4 ஆண்டுகளில் அருணா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்